தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டிகை - சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களில் 6.15 லட்சம் பேர் பயணம்

Published On 2025-10-19 10:18 IST   |   Update On 2025-10-19 10:18:00 IST
  • தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • 17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் கடந்த 3 நாட்களாக மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 16-ந்தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர்.

17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று இயக்கப்பட்ட 4 ஆயிரத்து 926 பஸ்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 152 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பஸ்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 922 பேர் பயணம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News