ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஐ.ஆர்.டி.டி வளாகத்தை படத்தில் காணலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை- கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
- வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும்.
- துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் இந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
72 ஆயிரத்து 889 பேர் ஓட்டு போடவில்லை. முக்கிய எதிர் கட்சிகள் புறக்கணிப்பால் இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும். இதன் நுழைவுவாயிலில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல 2 கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்.
நுழைவுவாயில் பகுதியில் டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், பணியாளர்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனத்தில் வருபவர்கள் ஐ.டி கார்டு, வாகன பதிவு எண், வாகனத்தில் வருபவர்களின் செல்போன் எண், முகவரி, உள்ளே செல்லும் நேரம், வெளியே வரும் நேரம், எந்த பணிக்காக வந்து உள்ளா ர்கள் போன்ற விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 மேஜைகளில் 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர், உதவி அலுவலர், நுண்பார்வையாளர்கள் உட்பட 3 பேர், கூடுதல் அலுவலர் ஒருவர் என 51 பேர் ஈடுபட உள்ளனர்.
இதை தவிர வாக்குபதிவு எந்திரங்களை எடுத்து வைத்தல் மற்றும் பிற பணிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். நாளை காலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மைய கட்டிடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.