தமிழ்நாடு செய்திகள்

இருமொழி கொள்கையே தொடர வேண்டும்- மாநில கல்விக்கொள்கை வெளியீடு

Published On 2025-08-08 10:51 IST   |   Update On 2025-08-08 11:16:00 IST
  • 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' தவிர 'ஸ்போக்கன் தமிழ்' மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.

சென்னை:

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.

அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.

பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.

மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கல்விக்கொள்கை மற்றும் மொழி

மொழி: பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம்.

இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.

'ஸ்போக்கன் தமிழ்': 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போலவே 'ஸ்போக்கன் தமிழ்' மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வு மற்றும் மதிப்பெண்

பொதுத்தேர்வு: 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.

நீட்: நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

11 மற்றும் 12-ஆம் வகுப்பு: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.

நிர்வாகம் மற்றும் கட்டணம்

மாநிலப் பட்டியல்: கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும்.

கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை

வயது வரம்பு: 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம்.

இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி

அங்கன்வாடி மையங்கள்: அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள்:

எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.

தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

கிராமப்புறப் பள்ளிகள்: கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

சமூக பிரச்சனைகள்

போதைப்பொருள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.

Tags:    

Similar News