ஓசூரில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள்.
- உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்ததுடன் அங்குள்ள தமிழர்களை சந்தித்தும் கலந்துரையாடினார். இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக இன்று காலை 8.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் திரளாக வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
அதன் பிறகு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருவார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன்.
இந்த பயணத்தை பொறுத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்து இருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கக் கூடிய 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.
எனக்கு முன்னாடியே நான் புறப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடியே என்னுடைய ஒட்டு மொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைத்து, அந்த பணியை வெற்றிக்கரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொழில்துறை அமைச்சரை பொறுத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்து உள்ளார்.
கடந்த 4½ ஆண்டு காலத்தில் மேற்கொண்டிருக்கக் கூடிய எனது பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த வெளிநாட்டு பயணத்தில்தான், மிக அதிக அளவிலான, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இது ரொம்ப வெற்றிகரமான பயணம். பெருமையான பயணமாகவும் இது அமைந்தது.
அது ஏன் என்றால், உங்களுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்தது தான் அந்த பெருமைக்கு காரணம்.
அதுமட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கையும், நாம் கடந்து வந்த பாதையையும் இனி அடைய வேண்டிய இலக்கையும் விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன்.
அதோட அயலக தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் திராவிட மாடல் பற்றி பேசியது, லண்டனில் இருக்கக் கூடிய பொதுவுடைமை தத்துவ மாமேதை கார்ல்மார்க்ஸ் நினைவிடம், சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை, ஜி.யு.போப் நினைவிடம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, பல பெருமைகளோடு நான் திரும்பி இருக்கிறேன்.
முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல, பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தை சார்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் எனக்கு தனிப்பட்ட வகையிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது.
சிலரால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம். இங்கிருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு புலம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறைய ஜெர்மன் கம்பெனி வந்திருந்தார்கள்.
அப்போது நம் தமிழ்நாட்டை பற்றி எடுத்து சொன்னதும் பல முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் இவ்வளவு கட்டமைப்பு இருக்கிறது என்று இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் தெரியுது. இதுக்கு முன்னாடி வேறு ஒரு மாநிலம்தான் தங்களது பொட்டன்ஷியலை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இனி நிச்சயம் தமிழ்நாட்டை நோக்கி நிறைய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.
அடுத்து ஜெர்மனியில் என்.ஆர்.டபிள்யு. மினிஸ்டர் பிரசிடெண்ட் ஹன்ரிக் ஹிஸ்ட் அவர்களை சந்தித்து பேசினேன். அவரும் அதையேதான் சொன்னார்.
இப்படியான தொடர்புகளை ஏற்படுத்தவும், பார்ட்னர்ஷிப் உருவாக்கவும்தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சரான நானே நேரில் போனேன்.
ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர் இன்னொரு நாட்டோட மாநிலத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவரை சந்திக்கும் போது பிசினசை தாண்டி இந்த உறவு வலிமையாகிறது. அதுதான் முக்கியம். அப்படித்தான் ஹென்றிக் ஹிஸ்ட், இங்கிலாந்து அமைச்சர் கேசரின் ஆகியோருடைய சந்திப்பு இருந்தது.
அதே போல்தான் நீங்கள் கேட்கிற அடுத்த கேள்விக்கான பதில் என்னவென்றால், ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும், அவங்க புதிய திட்டங்களை இங்கேதான் தொடங்க வேண்டும். விரிவுப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.
அவர்களுடைய புதிய முதலீடுகளை தமிழ்நாட்டிலேயே மேற்கொள்வதாக உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிற போது தான் அதை அவர்கள் உறுதி செய்தார்கள். அதுக்காக இந்த மாதிரி பயணங்கள் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு கொண்டிருக்கக் கூடிய மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் இதைப் பற்றி முதலமைச்சராக இருக்கக் கூடிய நானே எடுத்துச் சொல்கிறேன்.
இப்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, இன்னும் பல முதலீடுகளும், நிறுவனங்களும் இந்த சந்திப்பால் நிச்சயம் தமிழ்நாட்டுக்கு வரும் என்று நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இன்று 8-ந்தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து இன்னும் 2 நாளில் 11-ந்தேதி ஓசூருக்கு போகிறேன். அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டமெட்டல்லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து ரூ.1100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்.
அதே மாதிரி ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியது மாதிரி ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த போகிறோம். அங்கேயும் பல ஆயிரம் கோடி முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது. இது தொடரும், தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்ததும் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் வழிநெடுக கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கத்திப்பாரா ரவுண்டானா வரை நிர்வாகிகள் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.