ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் சோதனை
- ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
- தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தைலாபுரம் இல்லத்திற்கு மெட்டல் டிடெக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இ-மெயில் மூலம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.