முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது இதனால் தான் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
- இதய துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.
- இதய சிகிச்சை மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.