தமிழ்நாடு செய்திகள்

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை?- போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு

Published On 2024-12-11 10:08 IST   |   Update On 2024-12-11 14:44:00 IST
  • வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
  • மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது

கார், ஆட்டோவை தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது.

மோட்டார் வாகன விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன்படி, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்ஸிக்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News