என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 6-ந்தேதி கடைசி நாள்
- அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன
- என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. ஜூன் 2-ந்தேதி (அதாவது நேற்று) மாலை 6 மணி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்புக்கு 2 லட்சத்து 81 ஆயிரத்து 266 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 மாணவர்கள், ஒரு லட்சத்து 579 மாணவிகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 386 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 11 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் 12 பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஏதேனும் விளக்கங்கள் தேவை இருந்தால், தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவும், tneacare@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.