தமிழ்நாடு

ராமநாதபுரம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்த 2 பேர் கைது

Published On 2023-03-28 04:44 GMT   |   Update On 2023-03-28 04:44 GMT
  • காளீஸ்வரன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • கொலை வழக்கில் தொடர்புடைய பல்லு பாலா, ரஞ்சித் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் காளீஸ்வரன் (வயது 24). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஷாஜகான் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் காளீஸ்வரனிடம் தகராறு செய்தது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் காளீஸ்வரனை ஓட ஓட அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த ஷாஜகானுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். ஷாஜகான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கொலையுண்ட காளீஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரண்ட உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி ரோட்டில் மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர் இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

காளீஸ்வரன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காளீஸ்வரனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் ரஞ்சித் குமார் (29), நாகலிங்கம் மகன் குமார் என்ற கூலுக்குமாருக்கும் (30) பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளீஸ்வரன் தனது நண்பர்களுடன் கூலுக்குமார் வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தேவிபட்டினம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு பின் அவர்களுக்குள் முன்விரோதம் அதிகரித்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவானது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் குமார், கூலுக்குமார் அவரது நண்பர்கள் பல்லு பாலா, பாலகிருஷ்ணன் ஆகியோர் காளீஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பல்லு பாலா, ரஞ்சித் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன், கூலுக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News