தமிழ்நாடு

இளம்பெண் பிணமாக கிடந்த தகர கொட்டகையையும், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியதையும் காணலாம்.

பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை: உடலை மீட்டு போலீசார் விசாரணை

Published On 2023-10-27 07:04 GMT   |   Update On 2023-10-27 07:04 GMT
  • இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
  • கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் தகர செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த செட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து பள்ளி மாணவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

உடனே இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கட்டிடப்பணியில் ஈடுபட வந்த பெண்ணா அல்லது மர்மநபர்கள் வேறு எங்காவது இளம்பெண்ணை கற்பழித்து கொன்று இங்கு வந்து போட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரில் மாயமான பெண்களின் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News