தமிழ்நாடு

கணவனின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published On 2023-01-09 12:37 GMT   |   Update On 2023-01-09 12:37 GMT
  • திருமணமான நாள் முதல் அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த மனோகர்.
  • மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா என்பதும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

மது பழக்கத்திற்கு அடிமையான மனோகர் திருமணமான நாள் முதல் இரண்டு மாதங்களாக சவுந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.

இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சவுந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து 2மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 4 மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News