தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுக்கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலைமறியல் போராட்டம்- திறக்க கோரி ஆண்கள் போட்டி ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-11 10:53 GMT   |   Update On 2023-06-11 10:53 GMT
  • சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி திடீரென குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

கொளுத்தும் வெயிலில் பெண்கள் சாலைமறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடையிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெண்கள் சாலைமறியல் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க காலை 11 மணியில் இருந்தே ஏராளமான ஆண்கள் மதுகுடிக்க காத்து இருந்தனர். ஆனால் பெண்கள் போராட்டம் காரணமாக 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து 12.30 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.

இந்த போட்டி போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News