கே.வி.குப்பம் அருகே பெண் கொலை: நடத்தையில் சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்
- நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை அருகே உள்ள சின்ன நாகல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தீபா என்கிற தேவி (35).
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி, அடிக்கடி மனைவி தீபாவிடம் தகராறு செய்வார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகிலிருந்த விறகு கட்டை எடுத்து, தீபாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த தீபா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்த கயிறை எடுத்துவந்து, தீபாவின் கழுத்தை இறுக்கினார். இதில் தீபா துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.