தஞ்சை, நாகை தொகுதி மையங்களில் எந்திரங்கள் பழுது: தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு
- என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.
- வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தா நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 50 நிமிடமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக 22 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
மற்றொரு சம்பவம்...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தா நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 50 நிமிடமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. பின்பு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு சரி செய்யபட்டு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இதைப்போல் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் ஆனந்தராசு உதவி நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் 1 மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.