6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம்- வைகோ குற்றச்சாட்டு
- ராஜபக்சே கூட்டம் இன படுகொலை செய்துவிட்டு ஜெனீவா மனித உரிமைகள் மன்றத்தில் இன படுகொலை நடக்கவில்லை என்று தெரிவித்து வருகிறது.
- மோடி காசி தமிழ் சங்கமம் என்கிற பெயரில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள்.
சென்னை:
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 68-வது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன்.
சிங்கள படைகள் பிரபாகரன் படைகளை தோற்கடித்திருக்க முடியாது. போரிலே பின்னடைவு ஏற்பட்டாலும் கடைசி வரை மக்களை பாதுகாப்பதிலே அவர் கவனமுடன் இருந்தார்.
ராஜபக்சே கூட்டம் இன படுகொலை செய்துவிட்டு ஜெனீவா மனித உரிமைகள் மன்றத்தில் இன படுகொலை நடக்கவில்லை என்று தெரிவித்து வருகிறது.
தமிழீழ விவகாரத்தில் இந்தியா வஞ்சகம் செய்தது துரோகம் செய்தது. தமிழீழம் தான் தீர்வு, தமிழை சொல்லி, திருக்குறளை சொல்லி, பாரதியாரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார் அது ஒரு போதும் நடக்காது.
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார். பா.ஜனதாவின் கைப்பாவையாக ஊதுகுழலாக செயல்படுகிறார். தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுகிறார்.
மோடி காசி தமிழ் சங்கமம் என்கிற பெயரில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள்.
வரும் ஆண்டில் ம.தி.மு.க. சார்பில் தமிழீழ பாசறை பயிலரங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். வைகோவின் உயிர் பிரபாகரனுக்கு கடமைப்பட்டது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசு மறு சீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.