தமிழ்நாடு

காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த உடுமலை மலைவாழ் மக்கள்

Published On 2023-05-26 08:32 GMT   |   Update On 2023-05-26 08:32 GMT
  • கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர்.
  • சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் சுமார் 3000 அடிக்கு மேலே அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த சின்னான் - தனலட்சுமி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து காதலர்கள் தங்களது காதல் குறித்தும் பெற்றோர் எதிர்ப்பு பற்றியும் கிராம பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தனரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர். பின்னர் சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து பழங்குடியினர் முறைப்படி பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், தளி பேரூராட்சி துணை தலைவருமான செல்வன், வன உரிமை குழு தலைவர்கள் முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News