தமிழ்நாடு

கும்பகோணத்தில் தொழிலாளிகள் 2 பேர் மர்ம சாவு: மதுவில் சானிடைசர் கலந்து குடித்தனரா?- போலீசார் விசாரணை

Published On 2023-09-22 04:14 GMT   |   Update On 2023-09-22 06:28 GMT
  • நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். கையில் சானிடைசர் வைத்திருந்ததாக தகவல்
  • இன்று காலை காவிரி படித்துறையில் இறந்த நிலையில் உடல் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 50). கும்பகோணம் கர்ண கொல்லை கீழத் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (40). இவர்கள் இருவரும் நண்பர்கள். கூலி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கும்பகோணம் சுவாமிமலை செல்லும் வழியில் சக்கரப்படித்துறை அருகே பாலகுரு, சவுந்தர்ராஜன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

பின்னர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, பாலகுரு, சவுந்தர்ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த சில நாட்களாக கை கழுவும் சானிடைஷர் பொருட்களை வைத்து கொண்டு சுற்றி திரிந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக போதைக்காக மதுவில் சானிடைஷர் கலந்து குடித்தபோது அதன் வீரியம் அதிகரித்து இருவரும் இறந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இருந்தாலும் சம்பவ இடத்தில் சானிடைசர் போன்ற பொருட்கள் எதுவும் தென்படவில்லை.

மதுவில் போதை அதிகமாவதற்காக சானிடைசர் போன்ற பொருட்கள் கலந்து குடித்து இறந்தனரா? அல்லது வேறு போதை மாத்திரை எதுவும் காரணமா? என்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News