வேடசந்தூரில் பைக் மீது லாரி மோதி ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
- விருதுநகரில் நாளை நடைபெறும் தனது நண்பரின் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
- நண்பர்களான பிரபுகுமார், முத்துக்குமார் ஆகியோரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
வேடசந்தூர்:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் அரவிந்த் (26). இவர் பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விருதுநகரில் நாளை நடைபெறும் தனது நண்பரின் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் இன்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மற்ற நண்பர்களான பிரபுகுமார், முத்துக்குமார் ஆகியோரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் 4 ரோடு பகுதியில் இவர்கள் வந்து கொண்டிருந்தபோது தவறான பாதையில் எதிரில் வந்த மணல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் அரவிந்த் உள்பட மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.