தமிழ்நாடு

விதிமுறைகளை பின்பற்றாத 30 தனியார் பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து- போக்குவரத்து அதிகாரிகள்

Published On 2023-05-21 08:10 GMT   |   Update On 2023-05-21 08:10 GMT
  • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
  • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னேரி:

தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News