தமிழ்நாடு

சேலம் பட்டாசு குடோன் தீ விபத்தில் 3 பேர் பலி- ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

Published On 2023-06-01 14:24 GMT   |   Update On 2023-06-01 14:24 GMT
  • தீ விபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது.
  • காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீவிபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. ஒரு பெண் உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ் குமார் (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(வயது 45), மோகனா (வயது 38), மணிமேகலா (வயது 36), மகேஸ்வரி (வயது 32), பிரபாகரன் (வயது 31), பிருந்தா (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News