தமிழ்நாடு செய்திகள்

நடப்பு மாதம் நூல் விலையில் மாற்றம் இல்லை- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நிம்மதி

Published On 2022-12-01 10:56 IST   |   Update On 2022-12-01 10:56:00 IST
  • நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.
  • நூல் விலை குறையவில்லை என்றாலும், அதிகரிக்காமல் இருந்தது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

திருப்பூர்:

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம் நூல் விலை ரூ. 20 குறைந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன.

இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கடந்த மாத நிலையே தொடரும் எனவும் நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நூல் விலை குறையவில்லை என்றாலும், அதிகரிக்காமல் இருந்தது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News