தமிழ்நாடு

ஓட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்ததுதான் வெடி விபத்துக்கான காரணம்- அமைச்சர் தகவல்

Published On 2023-07-30 06:33 GMT   |   Update On 2023-07-30 06:33 GMT
  • வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. இதேபோல் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இன்று அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர். அதில் இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News