நெல்லையில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் கையை பிளேடால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு
- சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு நேற்று விரைந்தனர். அப்போது சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.
அப்போது சிறிது நேரத்தில் ஜீப்பில் இருந்த சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.