தமிழ்நாடு

ஜனாதிபதி தேர்தல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

Published On 2022-06-29 09:45 GMT   |   Update On 2022-06-29 12:17 GMT
  • அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.
  • திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனுதாக்கல் செய்துள்ள யஷ்வந்த் சின்கா நேற்று முதல் பல மாநிலங்களின் தலைநகரங்களுக்கு சென்று பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கேட்கவுள்ளார். இதற்காக, நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.

நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.

Tags:    

Similar News