தமிழ்நாடு செய்திகள்

மதகொண்டபள்ளியில் புகுந்த 6 யானைகள்- ஏரியில் குளித்தபோது செல்பி எடுத்த கிராம மக்கள்

Published On 2023-09-11 13:26 IST   |   Update On 2023-09-11 13:26:00 IST
  • 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது.
  • யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன. அந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வருகின்றன.

அதில் 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது. அந்தயானைகள் அதே பகுதியில் உள்ள கவுரம்மா ஏரிக்கு வந்தன. அப்போது அந்த யானைகள் ஏரிக்குள் இறங்கி ஆனந்தமாக குளித்தன. இதனை அந்த பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகினர்.

இதுகுறித்து பொது மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனசரகர் மற்றும் வனஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கவுரம்மா ஏரி பகுதிக்கு விரைந்து வந்து, 6 யானைகளையும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறையினரிடம் கிராம மக்கள் கூறுகையில், இந்த யானைகளை பகல் நேரத்தில் விரட்டியடித்தால், விவசாய நிலங்களுக்குள் பயிர்களை நாசம் செய்திடும். மேலும், வீடுகளுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அச்சமடைவார்கள். எனவே, இரவு நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.

இதனால் வனத்துறையினர் யானைகள் ஊருக்கு புகுந்து விடமால் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

மேலும், வனத்துறையினர் கிராம பகுதிகளில் ரோந்து சென்று ஒலிப் பெருக்கியில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தப்படியே யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News