தமிழ்நாடு

கார், ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி: டிரைவர் தொழிலில் களமிறங்கும் சென்னை திருநங்கைகள்

Published On 2022-11-27 11:05 GMT   |   Update On 2022-11-27 11:05 GMT
  • சென்னை, மற்றும் புறநகர்பகுதிகளில், ௨ ஆயிரம் திருநங்கைகள் தற்போது வசித்து வருகின்றனர்.
  • திருநங்கைகள் வாகனம் ஓட்ட சென்னையில் அதிகாலையில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் கார், ஆட்டோ ஓட்டுவதற்கு திருநங்கைகள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். விரைவில் டிரைவர் தொழிலில் களமிறங்குகிறார்கள்.

சென்னையில் கவுரவமான தொழிலில் ஈடுபடும் வகையில், 50 திருநங்கைகளுக்கு சகோதரன் அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து கார், ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை, மற்றும் புறநகர்பகுதிகளில், 2ஆயிரம் திருநங்கைகள் தற்போது வசித்து வருகின்றனர். சிலர் சுயதொழில் செய்து வருகின்றனர். பெரும் பாலானோர் ரெயில்களிலும், கடைகளிலும்,பொதுமக்களிடம் காசு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, சகோதரன் அமைப்பு சார்பில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வசிக்கும் 50 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னைஅரிமாசங்கம் ஏற்பாட்டின் பேரில் 50 திருநங்கைகளுக்கு இந்த வாகனஓட்டுனர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை "சகோதரன்"அமைப்பு தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக 10 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்டுவதற்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடித்தவர்கள் ஆட்டோ, கார் ஓட்டுனராக களமிறங்கி சென்னையில் கார், ஆட்டோ டிரைவர் பணியில் முன்மாதிரியாக வலம் வர உள்ளனர்.

இதற்காக திருநங்கைகள் வாகனம் ஓட்ட சென்னையில் அதிகாலையில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். மேலும் டிரைவர் பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு விரைவில் சொந்த வாகனங்கள் வாங்குவதற்கு திருநங்கைகள் அமைப்பின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Similar News