தமிழ்நாடு

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து பெண் டாக்டர் பலி

Published On 2023-11-24 06:44 GMT   |   Update On 2023-11-24 06:44 GMT
  • மாரடைப்பு ஏற்பட்டு அன்விதா உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • டாக்டர் அன்விதாவின் தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியில் வசித்து வந்தவர் அன்விதா. 24 வயதே ஆன இளம் டாக்டரான இவர் தனது உடலை சீராக வைத்திருப்பதற்காக அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல உடற் பயிற்சி கூடத்துக்கு சென்ற டாக்டர் அன்விதா உடற் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இரவு 7.30 மணி அளவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று அன்விதாவை பார்த்தனர். அப்போது அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அன்விதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மயக்க நிலையிலேயே அன்விதாவின் உயிர் பிரிந்தது.

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அன்விதா உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இயற்கை மரணம் என்று டாக்டர்கள் சான்றிதழ்கள் அளித்ததையடுத்து அன்விதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கூறும்போது, 'பெண் டாக்டரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்பதால் போலீஸ் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடலையும், உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டாக்டர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் தோழிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் அன்விதாவின் தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மகளை டாக்ட ராக்கி அழகு பார்த்த அவரும் மகளின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர்.

சமீப காலமாகவே இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் டாக்டர் அன்விதாவின் உயிரிழப்பும் மாரடைப்பால் நிகழ்ந்துள்ளது.

Tags:    

Similar News