கொண்டப்பநாயக்கன்பட்டியில் தாய்ப்பால் குடித்த 2 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி பலி- பெற்றோர் கதறல்
- பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சு, கண்ணாடி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குறை பிரசவமாக 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது ஒரு கிலோ 500 கிராம் மட்டுமே இருந்தது.
இந்த குழந்தைக்கு வழக்கம் போல இன்று காலை தாய் மோனிஷா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது மூச்சுக்குழாயில் பால் ஏறியதாகவும், இதனால் விக்கல் எடுத்ததுடன் மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குழந்தை மயக்க நிலைக்கு சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சு-மோனிஷா தம்பதி குழந்தையை உடனடியாக மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.