தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் கொள்ளை- ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர சோதனை

Published On 2023-02-12 13:40 IST   |   Update On 2023-02-12 15:31:00 IST
  • கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் திவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வாணியம்பாடி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும் அதே போல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையிலும், வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுரோடு பகுதியில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பேரணாம்பட்டு பத்திரபல்லி, பனமடங்கி, சேர்க்காடு, சோதனை சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News