தமிழ்நாடு

தேவர் குருபூஜை விழாவையொட்டி 13 கிலோ தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

Published On 2023-10-25 07:08 GMT   |   Update On 2023-10-25 07:08 GMT
  • பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
  • வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக கோர்ட்டு உத்தரவுப்படி தங்க கவசம் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி பெற்று விழாக்குழுவிடம் வழங்கினார். தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையடுத்து தங்களிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

Tags:    

Similar News