தமிழ்நாடு

சமோசா சாப்பிட்டதில் தகராறு: இரு தரப்பினருக்கு இடையே மோதல்- 2 பேருக்கு கத்திக்குத்து

Published On 2023-09-20 05:10 GMT   |   Update On 2023-09-20 05:10 GMT
  • ஒரு தரப்பினர் அங்கிருந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.
  • காயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சேலம்:

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அன்சர்அலி (வயது 34). இவர் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் டீ மாஸ்டர் உள்பட 8 பேர் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல் இன்று அதிகாலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சிலர் இன்று அதிகாலை கடைக்கு வந்து 250 ரூபாய்க்கு சமோசா வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு தரப்பினர் அங்கிருந்து தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப் பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் கடையில் வேலை பார்க்கும் ருக்குல்லா, அம்சத் அலி இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பால்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றார். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News