தமிழ்நாடு

சேலம் கோரிமேட்டில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் பணம், நகை கொள்ளை

Published On 2023-08-31 07:00 GMT   |   Update On 2023-08-31 07:00 GMT
  • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
  • கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம்:

சேலம் கோரிமேடு அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி வி.கே.வி.நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (70).

இவர் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் மாதந்தோறும் பவுர்ணமியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அம்மன் கோவிலுக்கு மனைவியுடன் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று பவுர்ணமியையொட்டி மாலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி சுந்தரம் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து உடனடியாக மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

Similar News