தமிழ்நாடு

பா.ம.க.வுக்கு ஒரு நீதி? தி.மு.க.வுக்கு ஒரு நீதியா? ராமதாஸ் அறிக்கை

Published On 2023-11-15 07:56 GMT   |   Update On 2023-11-15 07:56 GMT
  • தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது.
  • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியில் இருந்து இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வரும் 27-ந்தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 188 இருசக்கர ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால், இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது தான் எனது வினா.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இருசக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்து இருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 ஊர்திகள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருசக்கர ஊர்தி பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.

ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட காவல்துறை, இப்போது கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம். தி.மு.க.வுக்கு ஒரு நீதி... பா.ம.க.வுக்கு ஒரு நீதியா?

தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News