தமிழ்நாடு செய்திகள்
மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.

அந்தியூர் அருகே அரசு ஆஸ்பத்திரி டாக்டர் இடமாற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-07-29 11:07 IST   |   Update On 2022-07-29 11:07:00 IST
  • எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சரவண பிரபு.
  • சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி மாறுதல் செய்தனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சரவண பிரபு.

இவரை சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி மாறுதல் செய்தனர். இந்த தகவல் அறிந்த எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் டாக்டர் இடமாற்றத்தை எதிர்த்து எண்ணமங்கலம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் டாக்டர் சரவணப் பிரபுவை எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி மாறுதல் செய்யக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, விஜயகுமார். மண்டல துணை தாசில்தார் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சுதாகர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், மகளிர் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையின் இறுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக மனு வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News