தமிழ்நாடு செய்திகள்

முதியவரை கொடூரமாக கொலை செய்து உடலை பாலிதீன் கவரில் சுற்றி கால்வாயில் வீசிய கொலையாளிகள்

Published On 2022-09-03 10:07 IST   |   Update On 2022-09-03 10:07:00 IST
  • பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்ட நபருக்கு சுமார் 60 வயது இருக்கும்.
  • முதியவர் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன.

போரூர்:

சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலையையொட்டி உள்ள காளியம்மன் தெரு பகுதியில் பெரிய கழிவு நீர் கால்வாய் ஓடுகிறது.

இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கால்வாயையொட்டிய மெயின் ரோட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்த னர்.

பின்னர் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருகம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்ட நபருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. முதியவரான இவரை மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி கால்வாய் பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொலையுண்ட முதியவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 67 வயது மதிக்கத்தக்க அவரை கொலையாளிகள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலையாளிகள் வேறு பகுதியில் வைத்து கொலை செய்து விட்டு உடலை விருகம்பாக்கம் பகுதியில் கொண்டு வந்து வீசி சென்று உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதியவர் பாஸ்கரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரை கடத்தி கொடூரமாக கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

பாஸ்கரனுக்கு விரோதிகள் யார்-யார்? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News