தமிழ்நாடு

நாளை பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் திட்டம் உள்ளதா.... அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க...

Published On 2023-10-27 05:19 GMT   |   Update On 2023-10-27 05:41 GMT
  • அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

திண்டுக்கல்:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News