தமிழ்நாடு

தொடர் ஆன்லைன் விளையாட்டு: கோவையில் வாலிபர் திடீர் தற்கொலை

Published On 2023-02-19 05:04 GMT   |   Update On 2023-02-19 05:04 GMT
  • தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
  • கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் மதன்குமார் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

குனியமுத்தூர்:

கோவை வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி.

இவரது மனைவி நாகலட்சுமி(50). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மதன்குமார்(25) என்ற மகன் உள்ளார்.

இவர் பி.எஸ்(ஐ.டி) முடித்து விட்டு உரிய வேலை கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

வீட்டிலேயே இருந்ததால் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். அப்போது அவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆப்பை டவுன்லோடு செய்து விளையாடி வந்துள்ளார்.

முதலில் சாதாரணமாக விளையாடிய அவர், அதன் பின்னர் எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலேயே மூழ்கி அதற்கு அடிமையாகி விட்டார்.

தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்ததால் மதன்குமாருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் பார்வை குறைபாடு உண்டானது. இதனால் அவர் கடும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மதன்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று சுப்பிரமணியம் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி நாகலட்சுமியும் வழக்கம் போல ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் மதன்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதன்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் வேலைக்கு சென்ற நாகலட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது மகன் மதன்குமார் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News