தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் ஒரு செல்லாக்காசு- பொன்னையன் பேட்டி

Published On 2023-02-03 07:37 GMT   |   Update On 2023-02-03 07:37 GMT
  • உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது.
  • தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.

சென்னை:

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் அண்ணா நினைவிடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கேள்வி:-தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துள்ளார். ஏதாவது ஒருங்கிணைக்கும் முயற்சி ஏதும் நடக்கிறதா?

பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த பேரியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்துவது எம்.ஜி.ஆர். ஆவி, அண்ணாவின் ஆவி, அம்மாவின் ஆவி.

அந்த அடிப்படையிலே 1½ கோடி தொண்டர்களும் 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும் தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமி பின்னாலே அவரது தலைமையின் கீழ் இயங்குகிறார்கள். செயல்படுகிறார்கள்.

கேள்வி:- இந்திய தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவை ஏற்கவில்லை. இதை பின்னடைவாக ஏற்கிறீர்களா?

பதில்:- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரைக்கும் சட்டரீதியாக அவர்களுக்கு சில கடமைகள் உண்டு. ஒரு அரசியல் கட்சியினுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை கண்காணிக்க வேண்டியது நீதிமன்றம் அல்ல. சட்டரீதியாக.

அந்த அடிப்படையிலே அ.தி.மு.க. சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், ஆழமாக பார்த்து, சட்டத்துக்கு உட்பட்டு அந்தந்த கட்சிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. கடமையில் தவறி விட்டு, ஆரம்பத்தில் கோட்டை விட்டு விட்டு இப்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது, சட்டத்தை மீறிய செயல்.

தேர்தல் ஆணையம் கூறுகிற கூற்று அவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் போடப்பட்டிருக்கும் மனு சட்டத்துக்கு புறம்பான ஒன்று. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எல்லாமே நடக்கும்.

கேள்வி:- ஈரோடு தொகுதியில் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

பதில்:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க.தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். இதை ஏற்கனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. இதை எதிர்த்து வழக்கு போட்ட ஓ.பி.எஸ். இன்று வரை தடை உத்தரவு வாங்குவே இல்லையே.

கேள்வி:- ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. இரு அணியும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 2 தலைவர்களையும் சந்தித்து இருக்கிறாரே?

பதில்:- பாரதிய ஜனதா கட்சி வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது, பாரதிய ஜனதாவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை பி.ஜே.பி. எப்படியெல்லாம் பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

கேள்வி:- தேசிய ஜன நாயக கூட்டணி இப்போது இருக்கிறதா? உடைந்து விட்டதா?

பதில்:- உள்ளாட்சி தேர்தலிலேயே பாரதிய ஜனதா தனியாகத்தானே நின்றது. எனவே இந்த கேள்விக்கே பொருள் இல்லை.

கேள்வி:- பாரதிய ஜனதாவின் கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆபத்தா?

பதில்:- மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால் பி.ஜே.பி. எங்களோடு இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதை விரும்புகிறீர்களா? இல்லையா?

பதில்:- தி.மு.க. நீங்கலாக எல்லாருமே எங்களுடன் இருந்தால், நாங்கள் வர வேற்கதானே செய்வோம்.

கேள்வி:- ஈரோட்டில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அண்ணாமலை, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை சந்தித்தாரா?

பதில்:- எனக்கு தெரிய அப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் இல்லை. இமய மலையில் இருந்து தமிழக மக்களை காக்க கூடிய ஆற்றல் பெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த தேர்தல் நடக்க வேண்டும் என்பது மக்களுடைய கருத்து. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளுடைய கருத்து.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட, எடப்பாடி பழனிசாமிதான் மிகச் சிறந்த முதலமைச்சராக தமிழகத்தில் செயல்பட்டார் என்று கூறுகிற நிலை இருக்கிறது.

கேள்வி:- தி.மு.க. நீங்கலாக ஓ.பன்னீர்செல்வம் இணைய வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- அவர் ஒரு தனி நபர். ஓ.பி.எஸ்.சுக்கு கட்சியே இல்லையே? அவர் ஒரு செல்லாக்காசு. ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்.

கேள்வி:- ஓ.பி.எஸ். நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள். வேட்பாளரை அறிவித்துள்ளாரே? பா.ஜனதா போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம் என்று அறிவித்து இருக்கிறாரே?

பதில்:- நீங்கள் கூட சுயேச்சையாக நின்று கொண்டு எங்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது என்று அறிவிக்கலாம். மக்கள் ஏற்க வேண்டும். சட்டம் ஏற்க வேண்டும். அவர் அணியை சட்டம் ஏற்காது.

கேள்வி:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் உங்களது நிலைப்பாடு என்ன? டி.டி.வி.தினகரன், சசிகலா வந்தால் ஏற்பீர்களா?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் விதிகள் முடிவு செய்து விட்டன. ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு முடிவு செய்து விட்டது. அதற்கு மேல் என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News