அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
- பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ச. ராமச்சந்திரன் (கழக அமைப்புச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.