தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை 19 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்தது

Published On 2022-12-21 05:12 GMT   |   Update On 2022-12-21 05:12 GMT
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 44.8 சதவீதம் செ.மீ சராசரியாக பெய்ய வேண்டும்.
  • சராசரி மழை அளவை ஒப்பிடும் போது நேற்று வரை 42 சதவீதம் மழை பெய்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. அதையடுத்து நவம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது.

தொடர்ந்து வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பின.

சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்தது. இது போல பிற மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

நவம்பர் மாதத்தில் பெய்த அளவுக்கு டிசம்பரில் மழை கிடைக்கவில்லை. மாண்டஸ் புயல் காரணமாக வட தமிழகத்தில் அதிக மழை கிடைத்தது. பருவமழை காலம் முடியும் நிலைக்கு வந்துவிட்டது.

ஜனவரி 2-வது வாரம் வரை வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும் கூட டிசம்பர் இறுதி வரையில் மட்டுமே பெரும்பாலும் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 44.8 சதவீதம் செ.மீ சராசரியாக பெய்ய வேண்டும். சராசரி மழை அளவை ஒப்பிடும் போது நேற்று வரை 42 சதவீதம் மழை பெய்துள்ளது.

425 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது சராசரி மழை அளவாக இருந்தாலும் 19 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.

அதேநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 76 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 88 செ.மீ மழை பெய்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 57 செ.மீ ஆகும். ஆனால் 78 செ.மீ பெய்துள்ளது. இது 37 சதவீதம் அதிகமாகும்.

திருவள்ளூரில் சராசரி மழை அளவு 59 செ.மீ. அங்கு 69 செ.மீ மழை பெய் துள்ளது. இயல்பை விட 16 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

கோவையில் 39 சதவீதம், கிருஷ்ணகிரியில் 33 சதவீதம், நாமக்கலில் 41 சதவீதம், திருப்பத்தூரில் 53 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகி உள்ளது.

புதுச்சேரியில் 79 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 66 செ.மீ மழை பெய்துள்ளது. காரைக்காலில் இயல்பை விட 2.8 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது.

டிசம்பர் 20-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவை கணக்கிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News