தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு தினத்தில் சோகம்: புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2024-01-02 09:35 IST   |   Update On 2024-01-02 09:35:00 IST
  • மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள் புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
  • சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன் (வயது 27).

கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.

மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள் புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த இளம்பெண் அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் அருகில் உள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட இவரது கணவர் அருள்முருகனும் அதே கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாழப்பாடி தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி அருள்முருகன், அபிராமி ஆகியோரது உடல்களை இன்று அதிகாலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

புதுமணத் தம்பதி அடுத்தடுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News