தமிழ்நாடு

நாங்குநேரி விவகாரம் - முதல்வரை அலர்ட் செய்த வி.சி.க. தலைவர் திருமாவளவன்..!

Published On 2023-08-15 16:06 GMT   |   Update On 2023-08-15 16:27 GMT
  • மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம்.
  • பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது தாயாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, " நாங்குநேரி சம்பவம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க கல்வி வளாகங்களில் நடைபெறும் சாதிய மோதல்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் நல்ல வழி செய்யும் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

 

மேலும், "ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்று நோக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு நல்ல வீடு, பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

"தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தனி உளவுபிரிவு உருவாக்கப்பட்டு இருப்பதை போன்றே, சாதிய மதவாத பிரச்சினைகளை கண்காணிக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தமிழ்நாட்டை குறிவைத்து இருக்கும் நிலையில், இந்த உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News