மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு.. மு.க. ஸ்டாலின்
- பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அடிகளாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்து இருக்கிறார். உயிரிழந்த பங்காரு அடிகளாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.