தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்: திருமாவளவன் மனு தள்ளுபடி

Published On 2022-10-18 14:13 IST   |   Update On 2022-10-18 14:13:00 IST
  • அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை.
  • சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

அப்போது திருமாவளவன் தரப்பு வக்கீல், இந்த ஊர்வலத்தினால் மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், ஐகோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு கோர மனுதாரருக்கு உரிமை உள்ளது.

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்தது உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது. திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News