தமிழ்நாடு செய்திகள்

வரும் 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்

Published On 2022-10-27 13:23 IST   |   Update On 2022-10-27 13:23:00 IST
  • வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.
  • சிட்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை:

தென் மண்டல வானிலை அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:-

தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (29-ந்தேதி) தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நவம்பர் 4-ந்தேதி வரை மழை படிப்படியாக அதிகரிக்கும்

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். சிட்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட 45 சதவீதம் அதிகமாக பெய்தது. அதுபோல வடகிழக்கு பருவமழையும் அதிகமாக பொழியும் என எதிர்பார்க்கிறோம்.

இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

29-ந்தேதி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை. ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

31-ந்தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News