தமிழ்நாடு

திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2022-09-27 09:21 GMT   |   Update On 2022-09-27 09:21 GMT
  • மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
  • விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

சென்னை:

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு 28-ந்தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது, விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்காரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அக்டோபர் 2-ந்தேதி வி.சி.க. சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு இன்று காலையில் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் திருமாவளவன் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள் எனவும் திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News