கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மழை நீரால் தரைமட்ட பாலம் மூழ்கியது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கனமழை- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- திம்பம் அடுத்த ஆசனூர் அருகே தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, ஆசனூர் போன்ற மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மலைப்பகுதியில் திடீர் அருவி முளைத்துள்ளன. அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவான 33.50 அடியை தொடர்ந்து 3-வது ஆண்டாக எட்டியுள்ளது.
இதேபோல் நேற்று இரவு சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திம்பம் அடுத்த ஆசனூர் அருகே தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதேபோல் வனப்பகுதியில் கொட்டு தீர்த்த பலத்த மழையால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.