தமிழ்நாடு

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 'காலை உணவு திட்டம்'

Published On 2023-10-13 07:47 GMT   |   Update On 2023-10-13 07:47 GMT
  • கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
  • கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

மதுரை:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். மீனவ மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் மீனவ குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள்.

எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.

அரசு வக்கீலின் தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News