மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை - கவர்னர் ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு
- நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.
- நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.
நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை.
வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார்.
இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
நேதாஜி பிறந்தநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது.
"பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது. 1946-ம் ஆண்டு பிப்ரவரியில்… pic.twitter.com/FxGnEvZx50
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 23, 2024
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. திராவிட மாடலை கவர்னர் ஆர்.என்.ரவி விமர்சித்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதன் பின் சனாதன விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…
இதற்கிடையே நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
அப்போது கோவிலில் அடக்கு முறை நிலவுவதாக தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும், நேதாஜியே நாட்டின் தேசத்தந்தை என்றும் பேசியிருப்பது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.