தமிழ்நாடு செய்திகள்

இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-11-17 11:59 IST   |   Update On 2022-11-17 11:59:00 IST
  • இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
  • ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தபோது மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்த தப்பித்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News